
புதுடெல்லி: பிஹாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா டுடே சார்பில் பிஹாரில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையால், தே.ஜ கூட்டணி பலனடையும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.
பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளதாக 46 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி 21.7 சதவீத வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.