• October 9, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், “இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது.

ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால், இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும் பொதுப்புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

ஸ்டாலின்

ஸ்டாலின் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு, தற்போதுதான் அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அரசாணையில், “அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், சாலைகள், நீர்நிலைகள், இன்னபிறவை மற்றும் வருவாய்க் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/மறுபெயரிடுதல் – வழிகாட்டு நெறிமுறைகள்” என்று குறிப்பிடப்பட்டு, தெருக்கள் மற்றும் சாலைகளுக்கான எடுத்துக்காட்டுப் பெயர்களாக 16 பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

அரசாணை
அரசாணை

அவை, “திருவள்ளுவர், ஒளவையார், கபிலர், சீத்தலை சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், வீரமாமுனிவர், பாரதியார், பாரதிதாசன், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர்”.

மேலும் அந்த அரசாணையில், குளம் மற்றும் நீர்நிலைகளுக்கான மாற்றுப் பெயர்களாக, “ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ, காந்தள், கனகாம்பரம், கொன்றை, மகிழம்பூ, முல்லை, செண்பகம், குவளை, குறிஞ்சி, செவ்வந்தி” ஆகிய பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, அரசாணையில், தெருக்கள் மற்றும் சாலைகளுக்கான எடுத்துக்காட்டு பெயர்களில் அம்பேத்கர், எம்.சி.ராஜா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை அரசு குறிப்பிடாததைக் குறிப்பிட்டு, “அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே தி.மு.க அரசு பார்க்கிறதா?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் அண்ணாமலை, “தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சாதிப் பெயர்களுக்கான மாற்றுப் பெயர்களை வைக்க சில எடுத்துக்காட்டுகளையும் வழங்கி இருக்கிறது. அவற்றில், மாபெரும் தலைவர்களான, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை தி.மு.க அரசு புறக்கணித்திருப்பது ஏன்?

அண்ணாமலை
அண்ணாமலை

அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே தி.மு.க அரசு பார்க்கிறதா?

மேலும், தி.மு.க அரசு கொடுத்துள்ள பட்டியலில், ராணி வேலு நாச்சியார், கொடிகாத்த குமரன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தமிழகத்தின் பெருமைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் புறக்கணித்திருக்கிறது.

அப்படி அந்தப் பட்டியலில் இருக்கும் மாபெரும் தலைவர்கள் யார் என்று பார்த்தால், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தனக்குத்தானே சிலை வைப்பது, தனக்குத் தானே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வது என்று உங்கள் தந்தை செய்த நகைச்சுவைகள் போதாதென, தற்போது பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, அவரை மிஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.

கருணாநிதி- ஸ்டாலின்
கருணாநிதி- ஸ்டாலின்

உங்கள் குடும்ப நிறுவனங்களுக்கே உங்கள் தந்தை பெயரை வைக்காத நீங்கள், பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள்?

முன்னாள் முதல்வர்கள் பெயரை வைக்கிறோம் என்றால், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெயர் எங்கே?

சாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய தி.மு.க தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிக்கும் தி.மு.க அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திருத்தி, மேற்கூறிய அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் இணைத்து, புதிய அரசாணையை வெளியிட வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *