
தென்காசி: தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். இதற்கு மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் தலைமை வகித்தார். ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முனைஞ்சிப்பட்டி மற்றும் பத்தமடை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களை திறந்துவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் சிந்து வாரா மாவட்டத்தில் குழந்தைகள் உயிரிழப்புக்கு தொடர்புடையதாக கருதப்படும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குறித்து, மத்திய அரசிடமிருந்து கடந்த 1-ம் தேதி அவசரக் கடிதம் கிடைத்தது.