
சென்னை: தமிழகத்தில் அக்.14-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு, இஸ்ரேல் மற்றும் பிற தொடர்புடைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.