
திரைப்பட ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான சி.ஜெ.ராஜ்குமார், ஒளிப்பதிவு துறையில் 13 நூல்களையும், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நவீன ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், கலை மற்றும் திரைப்படத்துறையைப் பற்றிய இவருடைய எழுத்துகள், உலகளாவிய அளவில் சினிமா மாணவர்களுக்கும் தொழில்முனைவர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளன. தற்போது, சினிமா ஃபாக்டரி அகாடமியின் டீனாக பணியாற்றி வருகிறார்.
ஒளி என்பது சினிமாவின் ஆன்மா. அது வெறும் வெளிச்சமல்ல; அது கதை சொல்லும் மொழி. ஒளி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதே ஒளிப்பதிவின் பரிணாமப் பயணமாக மாறி, உணர்ச்சி, அர்த்தம் மற்றும் மாயையை உருவாக்குகிறது. இந்தப் பயணத்தின் மறக்க முடியாத உதாரணம், குரு தத் இயக்கிய ‘காகஸ் கே பூல்’ (1959). ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்தி இருண்ட படப்பிடிப்பு தளத்தில் ஒரே ஒரு திடமான ஒளிக்கதிரைப் பயன்படுத்தி சினிமா வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும், காட்சியை உருவாக்கினார். வெறுமையான ஸ்டூடியோவில் குரு தத் தனியாக அமர்ந்திருக்கும் அந்த ஒளிக்கதிர் தனிமை, அழிந்துபோகும் புகழ், கலைத் தேடல் ஆகியவற்றைச் சின்னமாக வெளிப்படுத்தியது.