
புதுடெல்லி: உ.பி.யில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.40 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உ.பி.யில் துப்புரவுப் பணியில் பெரும்பாலும் வால்மீகி சமூகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தலைநகர் லக்னோவில், பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மகாசபா அறக்கட்டளை சார்பில் மகரிஷி வால்மீகி பிரகத் திவஸ் நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக முதல்வர் யோகி பங்கேற்று பேசியதாவது: வால்மீகி பகவானை அவமதிப்பது ராமரை அவமதிப்பது போலாகும். இவர்களை வைத்து எதிர்க்கட்சிகள் சாதி அரசியல் செய்கின்றன. இதிலிருந்து தப்பிக்க வால்மீகி சமூகத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். வால்மீகி சமூகத்தினருக்கு அளிக்கப்படும் மரியாதை வால்மீகியின் மரபுக்கு செய்யும் மரியாதை ஆகும்.