
தேர்தல் வந்துவிட்டாலே தேர்தல் ஆணையத்துக்கு எக்ஸ்ட்ரா வேலை கொடுக்க புதுப் புதுக் கட்சிகள் புத்துணர்வுடன் பூத்துக் கிளம்பும். அதில் சிலர், தங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்றுகூட திரும்பிப் பார்க்காமல், “அடுத்து நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்” என்று அனாயசமாகச் சொல்வார்கள். அந்த வகையில், தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பானது, ‘நமது மக்கள் முன்னேற்றக் கழகம்’ (நமமுக) என்ற அரசியல் கட்சியாக அண்மையில் உருமாற்றம் கண்டிருக்கிறது.
மதுரையம்பதியில் இந்தக் கட்சியை அரசியல் உலகத்துக்கு அறிமுகம் செய்த அதன் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, “234 தொகுதிகளிலும் நமமுக போட்டியிட்டு தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக மாறும்” என்று அக்மார்க் அதிரடி கிளப்பினார். அரசியல் பிரவேசம் குறித்து அவரை இன்னும் கொஞ்சம் பேசச் சொன்னோம்.