
மதுரை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வதை கட்டாயப்படுத்தி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காகிதப் பயன்பாட்டை குறைக்க இணையவழி மனு தாக்கல் முறை ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
இம்முறையில் வழக்கு தொடர்பான மனுக்கள் மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்து, நீதிமன்ற வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்து அனுப்பவேண்டும். இந்த முறையை பின்பற்றுவதில் சில சிரமங்கள் எழுந்ததால், உயர் நீதிமன்றத்தில் இணையவழி மனு தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் அக். 8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.