
“தன்னை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை அரசியல் அநாதை ஆக்கினார், அன்று உங்களுக்கு தளபதியாக இருந்தவர்கள் இன்று ஸ்டாலினுக்கு தளபதியாக இருக்கிறார்கள்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“கரூர் விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் பொறுப்புடன் கையாள்கிறார்” என்று பாரட்டிப் பேசியதோடு “கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்று நினைக்கும் பழனிசாமியை ஆட்சிக்கு வரவிடாமல், அவரை வீழ்த்தாமல் அமமுக ஓயாது” என்றும் தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியது அதிமுக நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுயநலத்தின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எப்போது ஒருவர் திமுகவையும், ஸ்டாலினையும் பாராட்டி புகழ்ந்து பேசுகிறாரோ அப்போதே அவர் அதிமுக பற்றி பேசும் தகுதியை இழந்து விடுகிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் யார் தமிழகத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்பது பற்றி தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து, மக்களின் நம்பிக்கையை இழந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரின் கருத்தை யாரும் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தமிழகத்தில் தன்னுடைய ஆளுமைத் தோல்வியாலும், இயலாமையாலும், மக்களால் புறக்கணிக்கப்பட்டு, பொறாமையாக மாறி இன்றைக்கு அவர் பேசி வருவதை யாரும் பொருட்படுத்தவில்லை. அதிமுக தொண்டர்களின் இருபெரும் தெய்வங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் திமுக-வின் உண்மை முகத்தை, மன்னராட்சியை அழித்து மீண்டும் மக்களாட்சி மலர வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி இயக்கத்தை மீட்டு, தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார்.
அந்த லட்சியத்தை விட்டு விலகி, பொதுநலன், மக்கள் நலன், தொண்டர் நலன் மறந்து, சுயநலத்தின் மொத்த உருவமாக தினகரன் மாறி தஞ்சையில் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் யார் முதலமைச்சராக வரவேண்டும், வரக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்பதுதான் ஜனநாயகம்.
ஆனால், மக்களால், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட தனிநபரின் விருப்பம் மக்களிடம் பிரதிபலிக்காது, இதுதான் கடந்த கால வரலாறு. இன்றைக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழை நிலைநிறுத்த எடப்பாடி பழனிசாமி மக்கள் பணியாற்றி வருகிறார். குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்து தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்தார், ஆனால், இன்றைக்கு அதையெல்லாம் மறந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருபவருக்கு வரலாற்றைக் கூற கடமைப்பட்டுள்ளேன்.

வரலாற்று சாதனை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை நிச்சயம் மலரச் செய்வார். அதில உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். எங்களின் எதிர்கால அரசியல் பாதையை நீங்கள் தீர்மானிக்கத் தேவையில்லை.
இன்றைக்கு உங்களைப் புரிந்துகொண்டவர்கள் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள், புரியாதவர்கள் காலம் தாழ்த்தாமல் அவரை விட்டு விலகிச் செல்ல வேண்டும், பொதுநலனை மறந்து, சுயநலத்தோடு செயல்படுபவர்களால் அரசியல் பாதையை வகுக்க முடியாது. அவரை நம்பிய செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ்செல்வன் ஆகியோரை திமுகவிற்கு அனுப்பி வைத்தார், இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. மேலும் அவர் உண்மை முகத்தை தெரிந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மகேந்திரன், உமாதேவன் உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுள்ளனர்.

உங்களை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை அரசியல் அநாதையாக்கி விட்டீர்கள், அவர்களின் எதிர்காலம் என்ன? அதேபோல உங்களுக்கு தளபதியாக இருந்தவர்கள் இன்றைக்கு ஸ்டாலினுக்கு தளபதியாக மாறிவிட்டார்கள், அதற்கு என்ன பதில்?
இன்னும் பல பேர் உங்களை விட்டு ஓடலாம் என்று நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பல பேரை அரசியல் அநாதையாக்கிய பெருமை உங்களுக்கு உண்டு. இன்றைக்கு ஒரு தொண்டன் நாடாள முடியும் என்ற வரலாற்றை எடப்பாடி பழனிசாமி உருவாக்கியுள்ளார், நிச்சயம் 2026 தேர்தலில் சகாப்தம் படைப்பார்” என்று தெரிவித்துள்ளார்.