
ஆலங்குடி வெங்கடாசலம் என்று சொன்னால் அதிமுக-வின் சீனியர் தலைவர்கள், “அவரா..?” என்று அதிசயித்து வாய்பிளப்பார்கள். ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை என்பதற்காக அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, அப்பேர்பட்ட அம்மாவுக்கே தனது செல்வாக்கைக் காட்டியவர் வெங்கடாசலம்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அ.வெங்கடாசலம். கட்சியால் தனக்கு என்ன பலன் என்று பார்ப்பதைவிட தன்னால் கட்சிக்கு என்ன பலன் என்று பார்த்த தனித்துவமான அரசியல்வாதிகளில் வெங்கடாசலமும் ஒருவர். அதிமுக-வில் சாமானிய தொண்டனாக இருந்து அமைப்புச் செயலாளர் வரைக்கும் உயர்ந்தவர். புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்தரையர் சமூகத்து மக்கள் வெங்கடாசலத்தை தங்களுக்கான தலைவனாகவே பார்த்தார்கள். முதல் முறையாக இவருக்கு 1984-ல் ஆலங்குடி தொகுதியில் சீட் கொடுத்தார் எம்ஜிஆர். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அடுத்து வந்த மூன்று தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக இவருக்கு வழங்கவில்லை.