
நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் சந்தித்து தங்களது நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் ‘80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்’ நிகழ்ச்சி, இந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ராஜ்குமார் சேதுபதி-ஸ்ரீபிரியா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த 31 நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
பள்ளி, கல்லூரி நண்பர்கள் கூடிப் பேசுவதைப் போல, இந்த நட்சத்திர சங்கமம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கனமழை காரணமாக நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான சந்திப்பு நேற்று (அக்டோபர் 4) மாலை சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியா தம்பதியரின் இல்லத்தில் நடந்தது.
வெறும் ஆர்ப்பாட்ட கொண்டாட்டமாக இல்லாமல், அன்பின் வெளிப்பாடாக அமைந்த இந்த நிகழ்வை நடிகைகள் லிஸ்ஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்த ரீயூனியனில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழித் திரைத்துறைகளைச் சேர்ந்த 31 நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா, நதியா, ராதா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், ஜெயசுதா, சுமலதா, ரஹ்மான், குஷ்பூ, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், லிஸ்ஸி, நரேஷ், சுரேஷ், ஷோபனா, மேனகா, ரேவதி, பிரபு, ஜெயராம், அஸ்வதி ஜெயராம், சரிதா, பானு சந்தர், மீனா, லதா, ஸ்வப்னா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இது குறித்து ஏற்பாட்டாளர்கள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிஸ்ஸி லட்சுமி பேசுகையில், “இந்த நிகழ்வை ஒருங்கிணைத்ததில் பெரும் மகிழ்ச்சி. எங்களுக்கிடையேயான நட்பு, அன்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு தருணமாக இந்த சங்கமம் அமைந்தது” என்று தெரிவித்திருக்கின்றனர்.