
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து கூடுதலாக 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான காரணங்களைக் கூற வேண்டும் என்று சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா வலியுறுத்தியுள்ளார்.
பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் கூடுதலாக 3.66 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், 21.53 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம், மொத்தத்தில் 47 லட்சம் பெயர்கள் குறைந்துள்ளன. இதன் காரணமாக, கடந்த ஜூன் 24-ம் தேதி நிலவரப்படி 7.89 கோடியாக இருந்த பிஹார் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 7.42 கோடியாக குறைந்துள்ளது.