
எந்த ஒரு புதிய வாகனம் விலைக்கு வாங்கினாலும் அதனை உடனே கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
பழைய வண்டியை விலைக்கு வாங்கினாலும் அதற்கு ஒரு பூஜை செய்யாமல் இருப்பது கிடையாது. அப்படி செய்தால்தான் கார் பயணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இதுவே ஆடம்பர காராக இருந்தால் பூஜை செய்யாமல் இருக்க முடியுமா?
ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் பிரவீன் புதிதாக டெஸ்லா கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த காரை ஷோரூமில் இருந்து எடுத்து நேரடியாக அங்குள்ள கோயிலுக்கு கொண்டு சென்றார்.
கோயிலில் காருக்கு உறவினர்கள் முன்னிலையில் குங்குமம் வைத்து, மாலை அணிவித்து பூசாரி துணையோடு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கார் சக்கரத்தில் எலுமிச்சை பழமும் வைக்கப்பட்டு அதன் மீது ஏற்றப்பட்டது.
அதோடு கார் முன்பு தேங்காயும் உடைக்கப்பட்டது. இதைடுத்து இது தொடர்பான புகைப்படங்களை டாக்டர் பிரவீன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதோடு அவர் பகிர்ந்த பதிவில்,”இந்திய கலாச்சாரத்தில் வாகன பூஜை செய்யாமல் டெஸ்லா உட்பட எந்த காரும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெறாது”என்று குறிப்பிட்டுள்ளார்.
எலான் மாஸ்க் X தளத்தில் டேக்
அவர் டெஸ்லா கார் கம்பெனி உரிமையாளர் எலான் மாஸ்க் மற்றும் டெஸ்லா இந்தியா எக்ஸ்தள பக்கத்திலும் டேக் செய்துள்ளார்.
அவரது இந்த பதிவு வைரலாகி இருக்கிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர் தனது பதிவில், “இந்த கார் நிச்சயமாக இந்திய அழகியலில் இன்னும் சிறப்பாகத் தெரிகிறது. மேலும் மாலைகள் மற்றும் கோயில் சடங்குகள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் விமர்சனம்
மற்றொருவர் எலுமிச்சம் பழம் மற்றும் மிளகாய் இல்லாமல் டெஸ்லா கார் கூட பாதுகாப்பானது கிடையாது என்று ஜோக்காக குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியாவில், வாகன பூஜை என்பது விபத்து சோதனை சான்றிதழாகும். கோயில் ஆசீர்வாதங்கள் இல்லாமல் எந்த வாகனமும் உண்மையில் சாலைக்கு தயாராவதில்லை” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் பிரவீன் தனது டெஸ்லா கார் கையிக்கு கிடைத்தவுடன் ஒரு பதிவை எக்ஸ்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், “இன்று புதிய டெஸ்லா மாடல் Y-ஐ பெற்றது வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சி. ஹைதராபாத்திற்கு டெஸ்லா கார் வருவது இதுதான் முதல் முறையாகும்.
தொழில்நுட்பம் நிறைந்த இந்த கார் மூலம் எனது முழுமையான கனவு நனவாகியுள்ளது. இந்த முழுமையான அற்புதத்தை வடிவமைத்ததற்காக @elonmusk-க்கு மிகப்பெரிய பாராட்டுகள்”என்று எழுதினார்.
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் தான் டெஸ்லா கார் விற்பனைக்கு வந்தது. முதல் ஷோரூம் மும்பையிலும், இரண்டாவது ஷோரூம் டெல்லியிலும் திறக்கப்பட்டுள்ளது.