
திருவள்ளூர்: எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து விழுந்து, உயிரிழந்த 9 தொழிலாளர்களின் உடல்கள் அவர்களின் சொந்த மாநிலமான அசாமுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வாயலூரில், 1,320 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், ரூ. 9,800 கோடி மதிப்பில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமான பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ‘பெல்’ நிறுவனம் மூலம் நடைபெற்று வரும் இந்த கட்டுமான பணியில், பல்வேறு தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.