
பெங்களூரு: கிபி 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் மன்னர், போரில் வென்றதை முன்னிட்டு விஜயதசமி காலக்கட்டத்தில் தசரா விழாவை 10 நாட்கள் கொண்டாட தொடங்கினார். கடந்த 1947-ல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் அரசு விழாவாக‌ தசரா கொண்டாடப்படுகிறது.
415-வது ஆண்டாக தசரா விழாவை புக்கர் பரிசு வென்ற கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக் கடந்த 22-ம் தேதி மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோயில், கிருஷ்ணராஜசாகர் அணை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன‌.