
இராமலிங்கர் பணிமன்றம் மற்றும் ஏ.வி.எம் அறக்கட்டளை இணைந்து நடத்தும், 58வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா சென்னை, ஏ.வி.எம் இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்கவிழாவை நீதியரசர் இரா. சுரேஷ்குமார் தலைமையேற்று நடத்தினார். இறைவணத்துடன் தொடங்கிய நிகழ்வில் இராமலிங்கர் பணி மன்றத்தின் தலைவர் டாக்டர் ம. மாணிக்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் செல்வன் அஸ்வின் அண்ணாமலை, ‘மாணவர்களுக்கு மகாத்மா’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதன்பின் வழக்கறிஞர் சுமதி, ‘அட்சயபாத்திரம்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கிருங்கை சேதுபதி நன்றியுரை கூற முதல் நாள் விழா நிறைவு பெற்றது.
இன்று காலை 7.30 மணிக்கு திருவருட்பா அருளுரையினை வழங்கினார் முனைவர் அரங்க இராமலிங்கம். தொடர்ந்து ‘வாழ்விக்க வந்த காந்தி’ என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும். இதற்கு நெல்லை ஜெயந்தா தலைமை ஏற்று நடத்த இருக்கிறார். அதைத் தொடர்ந்து, ‘மாந்தருள் ஒரு தெய்வம் (மகாத்மா)’ என்னும் தலைப்பில் சிவ. சதீஸ்குமார் உரையாற்றுகிறார்.
மாலை 4 மணிக்கு, பாரதி திருமகன் வழங்கும் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. தமிழ் இலக்கிய உலகில் மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் விருதுகளில் அருட்செல்வர் விருது மிக முக்கியமானது. இந்த விருதுவிழா நிகழ்வில் சிற்பி பாலசுப்பிரமணியம், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், முனைவர் பஞ்சாங்கம், டாக்டர் ம. மாணிக்கம், மா, ஹரிஹரசுதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருதுகளில் முதல் பரிசினை, ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நூலுக்காக ஜி.குப்புசாமி மற்றும் ‘மணல் சமாதி’ நூலுக்காக அனுராதா க்ருஷ்ணஸ்வாமிக்கு வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசு, ‘மாதா ஆப்பிரிக்கா’ நூலுக்காக குறிஞ்சிவேலனுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாம் பரிசு ‘போரொழிந்த வாழ்வு’ நூலுக்காக கயல்விழிக்கும் ‘பேரரசன் அசோகன்’ நூலுக்காக தருமி (சாம் ஜார்ஜ்க்கும்) ‘தடங்கள்’ நூலுக்காக பத்மஜா நாராயணனுக்கும் ‘அழிக்க முடியாத ஒரு சொல்’ நூலுக்காக அனுராதா ஆனந்த்க்கும் ‘தமிழ் நிலத்தில் அகஸ்தியர்’ நூலுக்காக இஸ்கராவுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

நிகழ்வில் பாரதி பாஸ்கர், ‘வாழ்க நீ எம்மான்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அக்டோபர் 3,4,5 ஆகிய மூன்று தினங்களும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.