• October 2, 2025
  • NewsEditor
  • 0

தமிழகத்தைச் சேர்ந்த இனிஷியல் புள்ளி, நாட்டிலே உயரிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். அவர் அந்தப் பொறுப்புக்குச் சென்றதால், காலியான அவரின் பழைய இடத்துக்கு, புதியவர்களை நியமிக்க ஆட்களைத் தேடிவருகிறது டெல்லித் தலைமை. இனிஷியல் புள்ளி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் பழைய இடமும் தமிழகத்தைச் சேர்ந்தவருக்குதான் கிடைக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் சொன்னதை நம்பி, குஷியில் இருக்கிறாராம் மலர்க் கட்சியின் மன்னர் புள்ளி.

‘அந்தப் பதவி எனக்குத்தான் கிடைக்கும்…’ என்று கனவில் இருப்பவர், தன்மீது நிலுவையிலுள்ள வழக்குகளை ஒன்றின் பின் ஒன்றாக விரைந்து முடிக்க ஆர்வம் காட்டிவருகிறாராம். அதற்காக, காவல்துறையிலுள்ள தனது நண்பர்களிடம், ‘கேஸை முடிக்க உதவுங்கள்… நான் மேலிடத்துக்கு போனால் உங்களை மறக்கமாட்டேன்…’ என்று ஐஸ் வைத்து வருகிறாராம்!

தென்கோடி மாவட்டத்தைச் சேர்ந்த ‘க்ரீன்’ மாஜி, துறைமுகத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சுறுசுறுப்பாக களமிறங்கி உள்ளார். அதற்காக, சமீபத்தில் தனியார் மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, தொகுதியின் முக்கியமான நிர்வாகிகளுக்கு கறி விருந்து வைத்திருக்கிறார். அப்போது, ‘எப்படியும் துறைமுகத்தில் எனக்குதான் சீட் கிடைக்கும். அதனால எல்லோரும் எனக்கு வேலை செய்யுங்கள்’ என்று அன்புக் கட்டளையும் போட்டியிருக்கிறார்.

அதேநேரம், அந்தத் தொகுதி மலர்க் கட்சியின் கையில் இருப்பதால், கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கறி விருந்து குறித்து, இலைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுந்தரமானவரிடம் மலர்க் கட்சியினர் புகார் கொடுக்க, ‘நான் பார்த்துக்கிறேன்…’ எனச் சமாதானம் செய்துவைத்திருக்கிறார் சுந்தரமானவர். ஆனால், ‘மலர்க் கட்சிக்கு எதிராக அந்தத் தொகுதியில் கிரீன் மாஜியைக் களமிறக்கிவிட்டதே சுந்தரமானவர்தான்’ என ட்விஸ்ட் வைக்கிறார்கள் இலைக் கட்சியினர்!

தமிழகத்திற்கான புதிய ‘சட்டம் ஒழுங்கு’ டி.ஜி.பி-யைத் தேர்வுசெய்யும் கூட்டம், டெல்லி யு.பி.எஸ்.சி அலுவலகத்தில் கடந்த செப்.26-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொறுப்பு டி.ஜி.பி வெங்கட்ராமன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அப்போது, பொறுப்பு டி.ஜி.பி நியமிக்கப்பட்ட காரணங்களை யு.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கியதோடு, சீனியர் டி.ஜி.பி-க்கள் பட்டியலில் உள்ள ஒரு அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, நீக்க சொல்லியிருக்கிறார்கள் அந்த மூத்த அதிகாரிகள். ஆனால், காரணங்கள் சரியாக இல்லாததால், தமிழக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்கவில்லையாம் யு.பி.எஸ்.சி. ‘உங்க இஷ்டத்துக்கு பெயர்களைச் சேர்த்து, நீக்கி விளையாடாதீங்க…’ என்று டோஸ் விட்டிருக்கிறார்கள். ‘இந்த வார்த்தை மோதலால், டி.ஜி.பி நியமன விவகாரத்தில் முடிவு எட்டப்படாமல், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில், மீண்டும் யு.பி.எஸ்.சி அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடைபெறும்’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்!

அவார்டு மாவட்டத்தில், துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், துணையானவர் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில், ‘உங்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ள அரசு வேலைகளைச் சரியாகச் செய்யுங்கள். ஆய்வு என்பது வெறும் பேப்பரில் மட்டும் இருக்கக் கூடாது. களத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் எனது குழு ஆய்வு மேற்கொண்டது. அவர்கள் ஆய்வுக்கு வந்திருப்பதை அறிந்து, முடிக்கப்படாத சில பணிகளை இரவோடு இரவாக முடித்திருக்கிறீர்கள். ஏன் இப்படி இருக்கிறீர்கள்.. அந்தப் பணிகளை முன்பே செய்து முடிப்பதற்கு உங்களை யார் தடுக்கிறார்கள்…’ என லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம் துணையானவர். அங்கு இருந்த அமைச்சர்களுமே செய்வதறியாது அமைதியாக இருந்ததால், ஆய்வுக் கூட்டமே சில நிமிடங்கள் சைலெண்ட்டாக இருந்திருக்கிறது. பின்பு பேச்சைத் தொடர்ந்த துணையானவர், ‘இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்…’ என அறிவுறுத்தினாராம்!

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க-வுக்கு, புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செந்தமிழ்செல்வன், பழைய மாவட்டச் செயலாளரான கார்த்திக்கின் சமூகத்தைச் சேர்ந்தவர்தானாம். கார்த்திக்கால் கட்டம் கட்டப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர் என்பதோடு, தனது ஆதரவாளர் என்பதால் செந்தமிழ்செல்வன் பெயரை மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிதான் ‘டிக்’ செய்தாராம். அதேநேரத்தில், ‘கோவை மாநகரில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள், 100 வார்டுகள் உள்ளன. அங்கு, அ.தி.மு.க மாஜி அமைச்சர் வேலுமணி, பா.ஜ.க முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். ஆனால், புதியவர் எந்தளவுக்கு அந்த அரசியலுக்குப் பொருத்தமானவர் என்பது தெரியவில்லை. தன்னை மீறிச் செயல்பட மாட்டார் என்கிற ஒரே காரணத்திற்காகதான், செந்தில் பாலாஜி அவரை நியமித்துள்ளார். தேர்தல் சமயத்தில் நடந்திருக்கும் இந்த மாற்றம், கட்சிக்குள் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது’ என்கிறார்கள் கார்த்திக்கின் ஆதரவாளர்களும் உள்ளூர் உடன்பிறப்புகளும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *