
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
‛குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றிருக்கிறது.
இந்நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்துச் சாதித்திருக்கிறது.
3ம் இடத்தைப் பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்குமார் ‘India Today’-விற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவருக்கு இருக்கும் தூக்கப் பிரச்னை குறித்துப் பேசியிருக்கிறார்.
“சோசியல் மீடியாவைச் சரியாகப் பயன்படுத்தினால் அது ஒரு சிறந்த கருவியாக இருக்கும். நிறையப் பேர் சோசியல் மீடியா வழியாகத்தான் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்த நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.
அதேபோல வெளிநாடுகளில் உள்ள மக்கள் இந்தியத் திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் பார்க்கத் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

என்னுடைய சில நண்பர்கள் கொரியன் டிராமாக்களைப் பார்த்து அந்த மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் எனக்கு திரைப்படங்களையும் வெப் சீரிஸ்களையும் பார்க்க நேரம் எதுவும் கிடையாது.
விமானத்தில் பயணிக்கும்போது மட்டுமே எனக்கு தூங்க நேரம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் எனக்கு தூக்கப் பிரச்னையும் இருக்கிறது.
எனக்கு தூங்குவதற்குச் சிரமமாக இருக்கும். அப்படியே தூங்கினாலும், அதிகபட்சம் 4 மணி நேரம்தான் தூங்குவேன்” என்று கூறியிருக்கிறார்.