
தனக்கு ஒதுக்கப்பட்ட வடக்கு மண்டலத்தில் தனது கட்டுப்பாட்டில் வரும் 41 தொகுதிகளிலும் திமுக-வை ஜெயிக்க வைக்க வேண்டும் என மெனக்கிட்டு வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு. ஆனால், வேலுவை வெல்பவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது கட்சியினருக்கு அதிரடி ஆஃபர் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அண்மையில் சேலத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் எப்படி இருந்த திமுக-வை இப்போது எப்படி வைத்திருக்கிறீர்கள்? என்னுடைய தொகுதியில் வந்து பாருங்கள். அங்கே என்னை மீறி யாராவது ஜெயித்துவிட முடியுமா? அந்தளவுக்கு பக்காவாக வைத்திருக்கிறேன் எனது திருவண்னாமலை தொகுதியை” என்று தம்பட்டம் அடித்தார்.