
41 உயிர்களை துள்ளத் துடிக்க பறித்த ஒரு தேசிய துயரம், ஆதாயம் தேடும் சில அரசியல் கட்சிகளால் அதன் பாதையிலிருந்து மெல்ல விலகி, முழுக்க முழுக்க அரசியலாக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. கரூர் சம்பவத்திற்கு தார்மிக பொறுப்பேற்று களத்தில் நின்று கஷ்டத்தைப் போக்க வேண்டிய தவெக, சதி என பழியை ஆளும் கட்சி மீது போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறது. இதன் மூலம், தங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாம் திமுக தான் என்பது போல் அரசியல் அனுதாபம் தேடவே பார்க்கிறது தவெக.
அதேசமயம், தங்களை கடுமையாக விமர்சித்து வரும் விஜய்க்கு தக்க பதிலடி கொடுக்க காத்துக் கொண்டிருந்த திமுக, இந்தச் சம்பவத்தில் யாரும் அரசியல் அனுதாபம் தேடிவிடக் கூடாது என்பதற்காக சில உடனடி அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. கரூருக்கு மறுநாள் காலையில் வருவார் என்று சொல்லப்பட்ட முதல்வர் நள்ளிரவே கரூருக்குப் புறப்பட்டு, ஆகவேண்டிய காரியங்களை முடுக்கிவிட்டார். அதையெல்லாம் சொல்ல மனமில்லாதவர்கள், இப்படி அதீத அக்கறை எடுத்துக் கொண்டதும் அரசியல் தான் என விமர்சிக்கவே செய்தார்கள்.