
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் 2 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.