
திருநெல்வேலி: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவ வழக்கை சிபிஐ-க்கு மாற்றாவிட்டால் அதிமுக சார்பில் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி செயலருமான இன்பதுரை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த இன்பதுரை பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு திட்டம் தொடங்கப்பட்ட பின்னரும் அதில் தண்ணீர் முறையாக வரவில்லை. பல இடங்களில் ஷட்டர்கள் பழுது ஏற்பட்டுள்ளது. பாலங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.