
தாம்பரம் மாநகராட்சி, சேலையூர் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த, 15 ஆண்டுகளாக திமுக கவுன்சிலர் தாமோதரன் கோரிக்கை மனு அளித்து வருகிறார். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, சேலையூர் கிராமம், 45-வது வார்டில் உள்ள ஏழுமலை தெரு – பள்ளிக்கூட தெரு இணைப்பு சாலையை, சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர்.
இந்த தெருவில் அங்கன்வாடி மற்றும், கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மொத்தம் 22 அடி அகலமுள்ள சாலை, ஆக்கிரமிப்பின் காரணமாக, 3 அடியாக குறுகிவிட்டது. குழந்தைகளை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், செல்லப் பிராணிகள், ஆடு, மாடுகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொதுமக்களுக்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக உள்ளது.