• September 29, 2025
  • NewsEditor
  • 0

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஓட்டுத் திருட்டு தொடர்பான பிரச்னையை கிளப்பி வருகிறார். இதற்கு தேர்தல் கமிஷன் தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறது. இதனால் பா.ஜ.க தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பா.ஜ.க செய்தித்தொடர்பாளரும், கேரளா மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவருமான பிரிந்து மகாதேவ் மலையாள டி.வி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார்.

ராகுல் காந்தி

அவர் பேசுகையில், ”ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்” என்று குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அவர் மீது மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மகாதேவ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அனுப்பியிருக்கும் செய்தியில்,

”வன்முறையைத் தூண்டும் வகையில் ராகுல் காந்தியின் மார்பில் சுடப்படும் என்று மகாதேவ் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

இது வாய் தவறியோ அல்லது அலட்சியமாகவோ கூறப்படவில்லை. இது எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட கொடூரமான கொலை மிரட்டல் ஆகும்.

ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் இது போன்று பேசியிருப்பது, ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

எனவே அவரது பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படை மூலம் உறுதி செய்யவேண்டும். இது தொடர்பாக பல முறை கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

மேலும் ராகுல் காந்திக்கு எதிராக கொலை மிரட்டல்கள் மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக வன்முறைப் பேச்சுக்கள் பா.ஜ.க ஆதரவு பெற்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரப்பப்படுகிறது.

உங்கள் கட்சியும், அரசாங்கமும் இவ்விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது உங்களது பொறுப்பு.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் (K.C.Venugopal)
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் (K.C.Venugopal)

பொது வாழ்வில் நஞ்சை விதைக்கும் கிரிமினல் மிரட்டல், கொலை மிரட்டல்கள் மற்றும் வன்முறை அரசியலை நீங்கள் வெளிப்படையாக ஆதரிக்கிறீர்களா?

ராகுல் காந்திக்கு எதிரான கொலைமிரட்டல் என்பது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகம் மீதான தாக்குதல்.

இந்த அச்சுறுத்தல் கட்சி நிர்வாகியின் கவனக்குறைவான பேச்சு கிடையாது. இது வேண்டுமென்றே ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் நீங்கள் விரைந்து செயல்படத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான வன்முறைக்கு அனுமதி கொடுத்தது போன்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாதேவ் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து கேரள காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *