
சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடியாக சென்னை திரும்பினார். பிரச்சார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவது ஆகியவை தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்கூறுவதற்காக விஜய் மீண்டும் கரூர் செல்ல அனுமதி கேட்டு, கட்சித் தரப்பில் காவல் துறையில் மனு கொடுக்கப்பட உள்ளதாகவும்கூறப்படுகிறது.