
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 25,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 13 ஆண்கள், 16 பெண்கள், 10 குழந்தைகள் அடங்குவர்.
இதுவரை இந்த 39 பேரில் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 17 பேர் ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன்,
“இன்று நடந்தது மிகவும் வருந்தத்தக்க துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வு. கொடுக்கப்பட்டுள்ள தகவல் பிரகாரம் 38 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.
அதில் ஆண்கள் 12, பெண்கள் 16, ஆண் குழந்தைகள் 5, பெண் குழந்தைகள் 5. இந்த சம்பவம் தெரிந்தவுடன் காவல்துறை சார்பில் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆலோசித்து, உடனடியாக நமது லா அண்ட் ஆர்டர் ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு மற்றும் மூன்று ஐஜி, இரண்டு டிஐஜி, 10 எஸ்பி, 2000 போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.” என்றார்.
உழவர் சந்தை, ரவுண்டானா ஏன் கொடுக்கப்படவில்லை?
மேலும் அவர்,
“திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் கூறியதை விட கூட்டம் அதிகமாக வந்ததை மனதில் வைத்துக் கொண்டிருந்தோம்.
இந்த முறை கரூரில் அவர்கள் முதலில் கேட்டது லைட் ஹவுஸ் ரவுண்டானா, உழவர் சந்தை. அது இரண்டுமே இதைவிட குறுகிய இடங்கள்.
அதைவிட இது கொஞ்சம் வசதியான இடமாக இருக்கும் என்றுதான் அவர்கள் கேட்டதற்காக இதைக் கொடுத்தோம்.
முதலில் அவர்கள் அந்த இரண்டு இடங்கள் கேட்கிறார்கள், நாங்கள் முன்னாடி நடந்த கூட்டத்தை வைத்து இந்த இடம் போதாது என்று சொல்லப் போனதுதான், இந்த இடத்தை அவர்கள் வாங்கிக்கொள்கிறார்கள்.”

உங்களுக்கு ஞாபகம் இருக்கும், இதே இடத்தில் இரண்டு நாள் முன்னாடி ஒரு மாநில அளவிலான ஒரு பெரிய கட்சி கூட்டம் நடைபெற்றது. தவெகவினர் இந்தக் கூட்டத்திற்குச் சொன்னது பத்தாயிரம்.
ஆனால் வந்தது சுமார் 27000. ஆனால் 10,000-ஐ விட அதிகமாகத்தான் எதிர்பார்த்து காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டனர்.” என்றார்.
பின்னர் 500 காவலர்கள் தானே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் எனக் கேட்டபோது, “அந்த இடத்தில் காவல்துறையினர் 500 பேர் தான். அங்கே போலீஸ் அதிகம் நின்றால் மக்கள் நிற்க முடியாது.” என பதிலளித்தார்.
மேலும்,
“அந்த இடம் கரூர் ஊருக்குள் கரூர்-ஈரோடு சாலை மேலேயே இருக்கிறது. மாவட்ட அளவில் கலெக்டர், எஸ்.பி கூட்டம் போட்டு, அனைத்துக் கட்சிக்கும் அறிவிக்கப்பட்ட ஒரு இடம்.
இந்த இடத்துக்கு மதியம் 3 மணிமுதல் 10 மணிவரை தான் அனுமதி கேட்டிருந்தார்கள். 12 மணிக்கு வருவார் என்று ட்வீட் போட்டார்கள் tvk headquarters.

அதனால் 11 மணிக்கே கூட்டம் வந்தது. கடைசியாக அவர் வரும்போது மாலை 7:40. அதனால் காலையில் 11, 12 மணிக்கு வந்த கூட்டம் அங்கேயே இருந்தது. அவர்களுக்குத் தண்ணீர், சாப்பாடு எந்த வசதியும் கிடையாது. இது முக்கியமான புள்ளி.
அவர் வரும்போது வரவேற்பு ஒரு இடத்தில் நடக்குது. அங்கிருந்து கூட்டம் பின்னாடியே வருது. போலீஸ்தான் ஊருக்குள்ள கூட்டிச் சென்று வந்தாங்க. அதை விஜய்யே கூறினார்.” என்றார்.
தவெக நிர்வாகிகள் குறைபாட்டால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது காவல்துறை குறைபாட்டால் நடந்ததா என்ற கேள்விக்கு, “இது எதனால் நடந்தது என்ற காரணத்தை நாம் கூற முடியாது, அது விசாரணைக்கு உட்பட்டது. நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் போடப்பட்டுள்ளது.” என பதிலளித்து விடைபெற்றார்.