
சென்னை: “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்வதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்” என விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், தவெக தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த விவகாரத்தை நாளை (திங்கட்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க உள்ளது. இந்த சூழலில் இது தொடர்பாக வன்னியரசு, சமூக வளைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.