
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 27,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.
கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூரில் இன்று நடைபெற்ற இந்த கூட்ட நெரில் துயரச் சம்பவம் குறித்து தமிழ்நாடு பொறுப்பு DGP வெங்கடராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 12 ஆண்கள், 16 பெண்கள் 16, 5 சிறுவர், 5 சிறுமியர் அடக்கம்.
செய்தியாளர்களின் கேள்வியும், DGP வெங்கடராமன் பதிலும்
சரியான இடத்தில் அனுமதி வழங்கவில்லை, கரூர் ரவுண்டான பகுதில் அனுமதி தரவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள்?
கரூர் பரப்புரைக்கு தவெகவினரின் கோரிக்கையை ஏற்றே அனுமதி கொடுக்கப்பட்டது. திருச்சி, நாகையில் அவர்கள் கூறியதை விடவும் கூட்டம் அதிகமாக வந்ததை கருத்தில் கொண்டே லைட் ஹவுஸ் மற்றும் உழவர் சந்தை மிகக் குறுகிய இடம் என்பதாலேயே மாற்று இடமாக அதைவிட பெரிய இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் தான் சில தினங்களுக்கு முன்பு, வேறொரு அரசியல் கட்சியின் கூட்டமும் நடைபெற்றது. அதை கருத்தில் கொண்டுதான் வேலுசாமிபுரத்தில் இடத்திற்கு அனுமதி கொடுத்தோம். தவெகவினர் கேட்டதன் அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்பட்டது.

காவல்துறை சார்பாக முறையாக பாதுகாப்பு வழங்கப்பட்டதா?
தவெக தலைவர் விஜய் அவர்களே காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாக ‘மனமார்ந்த நன்றி’யைத் தெரிவித்திருந்தார். போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது, விஜய் பிரச்சார பாதுகாப்பு பணியில் 500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
10 ஆயிரம் பேர் வருவர் என சொல்லினர். ஆனால் வந்தது 27 ஆயிரம் பேர் வந்தனர். மதியம் 3 மணியிலிருந்து, இரவு 10 மணி வரை பரப்புரை மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
தமிழக வெற்றி கழக ‘ட்விட்டர்’ பக்கத்தில் காலை 11 மணியிலிருந்து 12.45 மணி வரை பரப்புரை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். விஜய் தாமதமாக வந்ததால் கூட்டம் அதிகரித்தது.
இதனால் காலை 11 மணியிலிருந்து மக்கள் வந்து காத்திருந்தனர். அவர்களுக்கு தண்ணீர், போதிய உணவு பற்றாக்குறையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதை குற்றம் சொல்வதற்காக நாங்கள் கூறவில்லை.
இந்தக் கூட்ட நெரிசலில் என்ன நடந்து என்பது குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் தெரிய வரும்.” என்று பேட்டியளித்திருக்கிறார்.