
லக்னோ: உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகில் உள்ள பகல்வாரா கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மதரசா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து பயாக்பூர் துணை ஆட்சியர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையில் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அங்கு ஆய்வு நடத்தச் சென்றனர்.
அப்போது அதிகாரிகள் மாடிக்குச் செல்வதை மதரசா நடத்துபவர்கள் தடுக்க முயன்றனர். எனினும் போலீஸார் உதவியுடன் அக்கட்டிடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாடியில் இருந்த கழிப்பறை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து பெண் போலீஸார் அதன் கதவை திறந்தபோது, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 40 சிறுமிகள் ஒருவர் பின் ஒருவராக கழிப்பறையில் இருந்து வெளியே வந்தனர்.