
புதுடெல்லி: பிஹாரில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவியை அவர் வழங்கினார். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில அரசு சார்பில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி பிஹாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒரு பெண்ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து சாதனை படைக்கும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் உறுதி அளித்து உள்ளார்.