
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசிய கருத்துக்காக அவருக்கு வழங்கப்படும் கட்டணத்தில் 30% அபராதம் விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
சூர்யகுமார் யாதவ் செய்ததென்ன?
அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய மோதலைக் குறிப்பிட்டுப் பேசியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை, ஏப்ரல் மாதம் நடந்த பகல்ஹாம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது பதிலடி தாக்குதல்களை நடத்திய இந்திய ஆயுதப் படைகளுக்கும் சூர்யகுமார் சமர்பித்தார்.
இதுகுறித்து ஐசிசியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரைத் தொடர்ந்து, செப்டம்பர் 25, வியாழக்கிழமை நடந்த அதிகாரப்பூர்வ விசாரணையின் போது சூர்யகுமார் யாதவின் குற்றமற்றவர் மனுவை (No Guilt Plea) போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நிராகரித்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் சூர்யகுமாருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது பிசிசிஐ.
பாகிஸ்தான் வீரர்கள் மீது புகார்
முன்னதாக ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின் நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ புகார் அளித்திருந்தது. இதற்கு பதிலாகவே சூர்யகுமார் மீது புகார் அளிக்கப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 21ஆம் தேதி நடந்த போட்டியில் ஹாரிஸ் ரவூஃப் எதிரணியினரைத் தூண்டும் விதமாக செய்கைகளை மேற்கொண்டார்.
ஒரு கட்டத்தில், ஹாரிஸ் இந்திய கூட்டத்தை நோக்கி தனது கைகளை நீட்டி ‘6-0’ என்று சைகை காட்டினார் – மே மாத மோதலின் போது ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவதை கூற்றுக்களைக் குறிப்பிடுவதாக அமைந்தது.

இதற்குப் பல தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மற்றொரு வீரரான சாஹிப்சாதா, மட்டையை வைத்து துப்பாக்கி சுடுவதுபோல செய்கை செய்தார்.
ஆனால் அது அரசியலானது அல்ல என விளக்கமளித்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோரும் இதைச் செய்துள்ளனர் என வாதிட்டிருக்கிறார்.
சாஹிப்சாதா ஃபர்ஹானைக் கண்டித்த ஐசிசி அபராதம் விதிக்கவில்லை. ஹாரிஸ் ரவூஃப்-க்கு அவரது கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.