
புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. இதேபோல், பிஹார் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களையும் அக்கட்சி நியமித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்களை கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டா நியமித்துள்ளார். அதன்படி, பாஜக தேசிய துணைத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான பைஜயந்த் பாண்டா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கூட்டுறவுத்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துறைகளின் இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது." என தெரிவித்துள்ளார்.