
“உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை முதன் முறையாக தமிழகத்தில் நடைபெறுகிறது” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை வந்திருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடம் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் பல்வேறு திட்டப் பணிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன. தொய்வாக நடைபெறக்கூடிய அரசு திட்டப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகின்றன. உலகெங்கும் இருந்து 29 அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளன” என்றவரிடம், ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் வடமாநில வீரர்கள் விளையாடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?’ என்ற கேள்விக்கு,
“பிற மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் தங்கிப் படிக்கும் போது அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் அனுமதிக்கலாம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விளையாட்டு வீரர்களுக்கான தகுதி, திறமைகள் இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது” என்றவர், “மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.