
இந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி பீலா வெங்கடேசன் (56), நீண்ட காலமாக மூளைக் கட்டியுடன் போராடி வந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 24 புதன்கிழமை) காலமானார். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் திருமிகு. பீலா வெங்கடேசன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கிடேசன் அவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும், பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,
“தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் இ.ஆ.ப. அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.