
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில், நேற்று மாலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பரை ஊர்வலமாக தங்க கொடிமரத்தின் அருகே கொண்டு வந்தனர். அங்கு வேதபண்டிதர்கள் வேதங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடன் சின்னம் பொறித்த கொடி, தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இது முப்பது முக்கோடி தேவாதி தேவர்களையும் பிரம்மோற்சவத்துக்கு அழைப்பு விடுப்பதற்கான ஒரு நியதியாகும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை தினமும் காலையில் 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 9 மணி வரையிலும் உற்சவரான மலையப்பர் விதவிதமான வாகனங்களில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.