
கரூர்: கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டதாக தவெகவினர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் தென்னிலையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பள்ளிக்கு வந்த சில இளைஞர்கள், பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்வதாகக் கூறியுள்ளனர். அதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சுஜாதா சியாமளா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்தனர்.
இதை வீடியோவாகப் பதிவு செய்த இளைஞர்கள், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். அதில் பள்ளித் தலைமை ஆசிரியை படமும் இடம் பெற்றிருந்தது.