
“செந்தில்பாலாஜி கோடு போடச் சொன்னால் ரோடே போடுவார்” என்று கரூர் திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் வாயாரப் புகழ்ந்திருக்கும் நிலையில், “மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்கள் தங்களைத்தான் வளப்படுத்திக் கொள்கிறார்கள். கட்சி நிகழ்ச்சி என்றால் எங்களைத்தான் பிழிந்து எடுக்கிறார்கள்” என்று திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் சத்தமாகவே புலம்பித் தள்ளி இருக்கிறார்.
விருத்தாசலம் தொகுதி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ-வான பி.வி.பி.முத்துக்குமார் 2017-ல் திமுக-வில் இணைந்தார். உடனடியாகவே அவருக்கு கடலூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் அன்பில் மகேஸின் கல்லூரி தோழர் என்ற வகையில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் பதவியும் முத்துக்குமாருக்கு சாத்தியமானது. இப்போது இவர், அமைச்சர் பெயரைச் சொல்லி தனக்கான அனைத்தையும் எளிதில் சாதித்து வருகிறார்.