
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் மின்சாரம் தாக்கி மூவர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தாவில் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக, நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பெனியாபுகுர், காலிகபூர், நேதாஜி நகர், காரியஹட், ஏக்பல்பூர், பெஹலா மற்றும் ஹரிதேவ்பூர் நகரில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இதில் மின்சார கசிவின் காரணமாக உயிரிழந்த 3 பேரும் அடக்கம். சாலைகள், ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் பேருந்து போக்குவரத்து, புறநகர் ரயில் சேவை, மெட்ரோ சேவைகள் முடங்கின. தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் உடமைகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. கனமழை தொடரும் என்ற அறிவிப்பின் காரணமாக பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.