
2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் அதிமுக-விடம் தோற்றுப் போனது. தேனியை தங்களுக்காக கேட்டு வாங்கிய காங்கிரஸ், அங்கு இறக்குமதி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கொண்டுபோய் நிறுத்தியதால் ஓபிஎஸ் மகனிடம் தோற்றுப் போனது. வரலாறு இப்படி இருக்க… தேனி மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியையாவது இம்முறை காங்கிரஸுக்கு ஒதுக்கவேண்டும் என கதர் பார்ட்டிகள் இப்போதே கலகக்குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தேனி (அப்போது பெரியகுளம்) மக்களவைத் தொகுதியை மட்டுமல்லாது தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது காங்கிரஸ். காலப் போக்கில் அந்த நிலைமை மாறி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இங்கு காங்கிரஸ் போட்டியிடாத நிலை நீடித்து வருகிறது. இதனால் கட்சியின் வளர்ச்சியும் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் இந்த மாவட்டத்தில் பாரம்பரியமான காங்கிரஸ் ஓட்டு வங்கி இன்னும் பத்திரமாகவே இருக்கிறது.