
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்தவர் தங்கவேல்சாமி. கார் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தங்கவேல்சாமி, கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது எதிர்வீட்டில் வசித்து வந்த சுப்பையா என்பவரின் மனைவி பார்வதியுடன் தங்கவேல்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. சுப்பையா- பார்வதி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். எனினும் பார்வதி தங்கவேல்சாமியுடன் பேசிப் பழகி வந்தார்.
நாளடைவில் இது திருமணம் மீறிய உறவாக மாறியது. இதனை அறிந்த இருவரது குடும்பத்தினரும் அவர்களைக் கண்டித்தனர். இருப்பினும் தங்கவேல்சாமி பார்வதியுடன் பேசுவதை நிறுத்தவில்லை. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி காரில் புறப்பட்டு பல்வேறு இடங்களுக்கு சென்றனர். இந்த நிலையில், திருச்செந்தூருக்கு வந்த அவர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.
பின்னர், அருகிலுள்ள குலசேகரன்பட்டினத்திற்கு வந்த அவர்கள், முத்தாரம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் காரில் அமர்ந்தபடியே விஷம் அருந்தியுள்ளனர். பின்னர் மனம் மாற்றம் ஏற்பட்டு, 2 பேரும் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு முன்பு காரை நிறுத்திவிட்டு ”நாங்கள் விஷம் குடித்துவிட்டோம். எங்களை காப்பாற்றுங்கள்” எனக் காரில் இருந்தபடியே அழுது கதறியுள்ளனர்.

காவல் நிலையத்தின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.