
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை மாநகருக்கு தினமும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.66.78 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீரை சுத்திகரிப்பதற்காக, சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் ரூ.296 கோடியில், தினசரி 530 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கப்பட்டு, கடந்த 2007 ஜூலை 19-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த நிலையத்தின் முதல் வரிசை குழாய் மூலம் சென்னை மற்றும் தாம்பரம் மாநகர பகுதிகளுக்கு தினமும் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.