
திருப்பதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளது.
திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் இடமான ‘பரகாமணி’யில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் (ஆண்கள் மட்டும்) உண்டியல் பணத்தை எண்ணுவது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் என்பவர், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வெளிநாட்டு கரன்சிகளை திருடி வந்துள்ளார். உண்டியல் பணத்தை எண்ணும்போது அடிக்கடி கழிப்பறைக்கு சென்ற அவர், வெளிநாட்டு கரன்சியை பிளாஸ்டிக் கவரில் வைத்து ஆசன வாயில் திணித்து திருடி வந்துள்ளார்.