
உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது. அப்படி எண்ணெய் வாங்கும் இந்தியா, பிரேசில் மீது ஏற்கெனவே கூடுதல் வரியாக 25 சதவிகிதத்தை விதித்துள்ளது அமெரிக்கா.
இதனால், இந்த இரு நாடுகளுக்கும் அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவிகிதம் ஆகும். இப்போதைக்கு இந்த வரிக்கு சீனா மட்டும் விதிவிலக்காக உள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் இந்தியா, சீனாவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
செர்ஜி லாவ்ரோவ் பேசியது என்ன?
செர்ஜி லாவ்ரோவ்,
“இந்தியா மற்றும் சீனா உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்கள். அவர்களிடம், ‘எனக்குப் பிடிக்காததைச் செய்வதை நிறுத்துங்கள், இல்லையேல் உங்கள் மீது வரி விதிப்பேன் என்று கூறுவது’ வேலைக்கு ஆகாது.
தற்போது பீஜிங் மற்றும் வாஷிங்டன், புது டெல்லி மற்றும் வாஷிங்டன்னிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் தற்போதைய பேச்சுவார்த்தை, அமெரிக்கா இதை புரிந்துகொண்டது என்பதைக் காட்டுகிறது.
அமெரிக்கா வணிக அச்சுறுத்தல்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளைப் புதிய சந்தைகள், புதிய சப்ளைகளை நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும், இது அந்த நாடுகளுக்குக் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது” என்று பேசியுள்ளார்.