
சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரில் வைர வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உட்பட சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் ரெட்டி. ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னை மற்றும் புறநகரில் பிரம்மாண்ட கட்டிடங்களை கட்டிவரும் இவரது நிறுவனம், அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இவரது வீட்டில் நேற்று காலைமுதல் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ராமகிருஷ்ணன் ரெட்டியின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.