• September 19, 2025
  • NewsEditor
  • 0

மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார்.

அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

“திரைக்கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் திரு. ரோபோ சங்கர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

“பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான திரு. ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கர் அவர்களின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

“ரோபோ சங்கர்

ரோபோ புனைப்பெயர் தான்

என் அகராதியில் நீ மனிதன்

ஆதலால் என் தம்பி

போதலால் மட்டும் எனை விட்டு

நீங்கி விடுவாயா நீ?

உன் வேலை நீ போனாய்

என் வேலை தங்கிவிட்டேன்.

நாளையை எமக்கென நீ விட்டுச்

சென்றதால்

நாளை நமதே”.

முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்

“சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை

“தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், மக்களின் இதயங்களில் புன்னகையை விதைத்ததாலும், ஒரு தலைமுறைக்கே அடையாளமாக விளங்கிய நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு கலைஞன் தனது கலை மூலம் மக்களிடையே நிலைத்து நிற்பதற்கே மிகப்பெரிய அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தை உண்மையாக்கியவர் தான் ரோபோ சங்கர். அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும், சொன்ன ஒவ்வொரு வசனமும், வெளிப்படுத்திய ஒவ்வொரு புன்னகையும் – மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

மக்களின் மனதைக் கவர்ந்து, மகிழ்ச்சியையும் சிரிப்பையும் பரப்பியவர் இன்று இல்லாதிருப்பது, கலை உலகிற்கு மட்டுமல்லாது, மக்களின் வாழ்வின் பல்வேறு தளங்களுக்கு இழப்பாகும். மக்களின் வாழ்வியலில் கலைஞர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் எப்போதும் மதித்தும் காத்தும் வந்துள்ளது. அந்த வரிசையில், ரோபோ சங்கர் அவர்கள் தன் கலைப்பணியால் தமிழக மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு, சிரிப்பின் அருமையை நமக்கு உணர்த்திய ஒரு கலையுலகப் பங்களிப்பு இன்று நிறுத்தப்பட்டதுபோல் உள்ளது. ஆனாலும் அவர் விதைத்த புன்னகைகள் தலைமுறைகளுக்கு சின்னமாகவே தொடரும்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தினர் இந்த மிகப்பெரிய துயரைத் தாங்க வலிமை பெற வேண்டும் என மனமாரக் கோருகிறேன்”.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

“நடிகர் திரு. ரோபோ சங்கர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை திறனால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர். இவரது மறைவு, திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்!

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஓம் சாந்தி!”

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“தனது நகைச்சுவைத் திறனால், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்த திரைக் கலைஞர், திரு. ரோபோ சங்கர் அவர்களது இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

திரு. ரோபோ சங்கர் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”.

ஓம் சாந்தி!

அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன்

“தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு ரோபோ சங்கர் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

தமிழ்த் திரையுலகில் தனித்துவமிக்க நடிகராகத் திகழ்ந்த திரு ரோபோ சங்கர் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைக்கலைஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

“சின்னத் திரையிலிருந்து வளர்ந்து, தமிழ்ச் சினிமாவில் தனது தனித்துவமிக்க நகைச்சுவை திறன் மூலமாகவும், குணச்சித்திர வேடங்களின் மூலமாகவும் புகழ்பெற்ற நடிகராகத் திகழ்ந்த நடிகர் ‘ரோபோ’ சங்கர் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில் வாடுகின்ற அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

ஓம் சாந்தி..!”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *