
புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்காகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்காகவும் பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்களையும், அதன் தாக்கங்களையும் இந்தியா ஆய்வு செய்யும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில் பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது இரு நாடுகளுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும்’’ என சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் அப்துலாசிஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்தனர். பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய 4 மாதங்களுக்குப்பின் இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே கையெழுத்தாகியுள்ளது.