
விருதுநகர், காந்திபுரம் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து 1998 ஜனவரி 22-ஆம் தேதி ரூ.150 லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மதுபானக் கிடங்கு உதவியாளர் பிரேம்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2008-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து பிரேம்குமார் மேல் முறையீடு செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை 2018-ல் தள்ளுபடி செய்தது. அதன் பின் தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற மேல்முறையீடும் 2019-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து குற்றவாளி தலைமறைவாக இருந்து வந்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் பிடி ஆணை பெற்றனர். அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், நேற்று மதுரை வில்லாபுரம் மணிகண்ட நகர் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த அவரை இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை, ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் வீரணன் அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.