
‘டீசலுடன் எத்தனாலைக் கலக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளது. அதனால், எத்தனாலுக்கு பதிலாக, டீசலில் ஐசோபியூட்டனால் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ – இது மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சமீபத்திய வார்த்தைகள்.
2014-ம் ஆண்டு, பெட்ரோலில் 1.5 சதவிகித எத்தனால் கலந்து, இந்தக் கலப்பு முதன்முதலாக தொடங்கியது. 2022-ம் ஆண்டு, பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலக்கப்பட்டது. தற்போது பெட்ரோலுடன் 20 சதவிகித எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கலப்பால் வாகனத்தின் மைலேஜ் குறைந்து வருகிறது என்கிற பரவலான குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
இன்னொரு பக்கம், நிதின் கட்கரியின் மகன்கள் எத்தனால் தொழிற்சாலை வைத்திருப்பதால், இவர் எத்தனால் கலப்பை ஊக்குவிக்கிறார் என்கிற எதிர்ப்பும் எழுந்தன.
இந்தப் பேச்சுகளை எதிர்த்து உயிரி எரிசக்தி மாநாட்டில் பேசினார் நிதின் கட்கரி. கூடவே, மேலே குறிப்பிட்டிருப்பதவது போல, டீசலுடன் ஐசோபியூட்டனால் கலக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
‘டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு கைக்கொடுக்குமா?’ என்கிற கேள்வியைச் சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதனிடம் பேசினோம்.
“இந்தியாவில் ஏற்கெனவே எத்தனால்-டீசல் கலவைப் பல தொழில்நுட்ப சிக்கல்களால் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில் தான், ஐசோபியூட்டனால் டீசல் கலவைக்கான சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், மத்திய அரசு எத்தனால் பிளெண்டிங் முறையைப் போன்று திட்டமிடாமல் நடவடிக்கைகள் மேற்கொண்டால், ஐசோபியூட்டனால் டீசல் கலவை முயற்சி கூட தோல்வி அடையலாம்.

ஐசோபியூட்டனால் நீரை குறைவாக இழுக்கும், டீசலுடன் எளிதாக கலக்கும். அதிக எரிசக்தி அடர்த்தி மற்றும் உயர்ந்த சீட்டேன் தன்மையைக் கொண்டதால் எத்தனாலை விட வேதியியல் ரீதியாக பொருத்தமானது.
மேலும், புகை மற்றும் துகள்களை குறைக்கும் திறனும் ஐசோபியூட்டனாலில் காணப்படுகிறது. இந்தியாவில் வேளாண் அடிப்படையிலான உற்பத்தி தொழில்நுட்பங்கள் வெகுவாக உருவாகி வருவதால், ஐசோபியூட்டனால் எளிதில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
தோல்வியைத் தடுக்க அரசு என்னென்ன செய்ய வேண்டும்?
முதலில், ARAI போன்ற நிறுவனங்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆய்வக சோதனை, நீண்டகால இயந்திர தாங்குதிறன் சோதனை, பல கட்ட சாலைகளில் (on-road) நேரடி சோதனை அடிப்படையிலான முயற்சிகள் மற்றும் பயிற்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அடுத்ததாக, டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் கலவைக்கான BIS/ASTM தரநிலைகள் உருவாக்கி, நீர் அளவு, சீட்டேன் மேம்படுத்திகள் (Cetane Improvers) , சேர்மங்கள் போன்றவற்றிற்கான விதிமுறைகளைத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

பஸ்/டிரக் போன்ற பல்வகை வாகனங்களில் டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் முதன்மையாக பயன்படுத்துவதற்கு வாகன தயாரிப்பாளர்களின் உத்தரவாதம் என்பது திட்டம் செயல்படுத்துவதற்கு முக்கிய காரணி ஆகும்.
முக்கியமாக, டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் விநியோக சங்கிலி வலுவாக இருக்க வேண்டும்.
உறுதி செய்ய வேண்டும்
ஐசோபியூட்டனால் கரும்பு, சோளம், பையோமாஸ் போன்ற மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து பெறுவதற்கு எண்ணெய் நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், மற்றும் விவசாயிகள் ஆகியோரிடம் மாற்று ஒப்பந்தங்கள் அமைக்க வேண்டும்.
வணிக சந்தையில் தடையில்லா உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியையும் அதிகரிக்க வேண்டும்.
சந்தையில் ஐசோபியூட்டனால் விலைப் போட்டியைக் குறைக்க ஊக்கத் திட்டங்கள், கலவைச் சலுகைகள், வரித்தள்ளுபடி போன்ற கொள்கைகள் தேவை.

மேலும், டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் எரிபொருள் கலவை தரத்தை கண்காணிக்க ஆய்வக வலையமைப்புகள், புல ஆய்வுகள் மற்றும் கடுமையான தரக்கட்டுப்பாடு அவசியம் ஆகும்.
பொதுமக்கள், மெக்கானிக்குகள், எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கு டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் கலவை பற்றிய பாதுகாப்பு, பராமரிப்பு நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்கள் குறித்து பயிற்சி வழங்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மதிப்பீடு (Life Cycle Assessment ) மூலம் பசுமைக் காற்று வாயு குறைப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும்.
தோல்வியைத் தடுக்க
டீசல் மற்றும் ஐசோபியூட்டனால் கலவைத் திட்டம் வேகமான நாடு முழுவதும் அமல்படுத்துதல், இதற்காக அதிக செலவு செய்தல், தரக் குறைபாடு, OEM உத்தரவாதம் இல்லாமை மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறை ஆகியவை திட்டத்தை தோல்வியடையச் செய்யக்கூடும்.

எனவே, ஆய்வுகள், தரநிலைகள், OEM இணக்கம், உற்பத்தி வழங்கல் திட்டமிடல், கொள்கை ஊக்கங்கள் மற்றும் தரக் கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்தல் மூலம் ஐசோபியூட்டனால் மற்றும் டீசல் கலவை இந்தியாவில் வெற்றிகரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை” என்று விளக்கினார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…