
குவாஹாட்டி: இந்துக்களின் இடங்களை வேறு பிரிவினருக்கு சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்து ஊழலில் ஈடுபட்ட அசாம் அதிகாரி கைது செய்யப்பட்டார். அசாம் சிவில் சர்வீஸ் அதிகாரி நூபூர் போரா. இவர் கம்ரூப் மாவட்டத்தின் கோராய்மாரி பகுதியில் வட்டார அதிகாரியாக 6 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என முதல்வர் அலுவலகத்துக்கு ஊழல் புகார்கள் வந்தன.
மேலும் இவர் பர்பேட்டா மாவட்டத்தில் பணியாற்றியபோது, இந்துக்களின் இடங்களை வேறு பிரிவினருக்கு சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்தார் எனவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து நூபூர் போரா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம், பல லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கைப்பற்றப்பட்டதாக எஸ்.பி. ரோசி கலிதா தெரிவித்தார்.