
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு & காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது.
இதை எதிர்த்து, இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’-ஐ நடத்தியது.
இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த, இரு நாடுகளுக்கு இடையேயும் தாக்குதல்கள் மாறி மாறி நடந்துகொண்டிருந்தன.
அதன் பின், இரு நாடுகளுக்கு இடையேயும் மே 10-ம் தேதி போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
பாகிஸ்தான் துணைப் பிரதமர் பேட்டி
இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடப்பது குறித்தும், அதை மற்ற நாடுகள் நடத்துவது குறித்தும் நேர்காணல் ஒன்றில், பாகிஸ்தான் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார் நேற்று பேசியுள்ளார்.
“எங்களுக்குப் பேச்சுவார்த்தையில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், இந்தியா தான், இது இருநாடுகளுக்கான பிரச்னை என்று பிற நாட்டினரின் தலையீட்டை மறுக்கிறது.
எங்களுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தையாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை விரிவானதாக இருக்க வேண்டும்.
அந்தப் பேச்சுவார்த்தையில் தீவிரவாதம், ஜம்மு & காஷ்மீர் என அனைத்தும் விவாதிக்கப்பட வேண்டும்.
மார்க் ரூபியோ சொன்னது என்ன?
கடந்த மே 10-ம் தேதி, போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்க் ரூபியோ மூலம் எனக்கு வந்தபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சுதந்திரமான ஏதோ ஒரு இடத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்பட்டது.

பின்னர், நான் ஜூலை 25-ம் தேதி, வாஷிங்டனில் ரூபியோவை சந்தித்தபோது, பேச்சுவார்த்தை குறித்துக் கேட்டேன்.
அதற்கு அவர், ‘இந்தியா, இது எங்கள் இருதரப்பினருக்கான பிரச்னை என்று மறுத்துவிட்டது’ என்று பதிலளித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை கூறிவிட்டார். ஆனால், இஷாக் தாரின் பதில், இந்தியா மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.